செய்திகள்
ஆனந்தன்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

Published On 2021-05-06 02:07 GMT   |   Update On 2021-05-06 02:07 GMT
மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் மருந்துகளை வைத்து பொதுமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர். ஆனந்தன் (வயது 42). தர்மபுரி மாவட்டம் பருவதனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (47). இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் கோட்டையூர் மலைக்கிராமத்தில் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. மேலும் அவர்கள் கிளினிக்கில் கொரோனா மற்றும் பிற நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் கோட்டையூர் மலைக்கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நடத்தி வரும் கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஆனந்தனும், அங்கமுத்துவும் மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் மருந்துகளை வைத்து பொதுமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போலி டாக்டர் ஆனந்தனை கைது செய்தனர்.

மேலும் போலீசார் வருவதை அறிந்ததும் மற்றொரு போலி டாக்டர் அங்கமுத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News