செய்திகள்
கோப்புபடம்

ரேஷன் கார்டு வழங்க ரூ.200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை

Published On 2021-04-24 13:49 GMT   |   Update On 2021-04-24 13:49 GMT
ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 2006-ம் ஆண்டில் பணிபுரிந்தவர் நாடிமுத்து.

இவர் நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சி என்ற பெண்ணுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாலாட்சி சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஏற்பாட்டின் பேரில் ரசாயன பவுடர் தூவப்பட்ட ரூ.200-ஐ கிராம நிர்வாக அலுவலர் நாடிமுத்துவிடம் கொடுக்கும் பொழுது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நாடிமுத்து மீது சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் சந்திரன் குமாரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது ஆகியோர் சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி உதய வேலவன் குற்றம் சாட்டப்பட்ட நாடிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News