புதுவையில் மது வாங்க முககவசம் கட்டாயம்
புதுச்சேரி:
புதுவையில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதை தொடர்ந்து மது பாட்டில்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இதனால் மது விலை அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் மது விலை குறைந்துள்ளது. இதனால் அண்டை மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் புதுவைக்கு வந்து மது வாங்கி செல்கிறார்கள்.
தற்போது புதுவையில் கொரோனாவின் 2-வது தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக புதுவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உரிமம் பெற்ற மது விற்பனையாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மதுக்கடைகளில் மது வாங்க வருபவர்களும், விற்பனையாளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சானிடைசர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க வேண்டும். அனைத்து உரிமதாரர்களும் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதனை கடை பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.