செய்திகள்
பாஸ்கர்

சாலையோர தடுப்பு சுவரில் மோதியது - மோட்டார் சைக்கிள் விபத்தில் மகளுடன் போலீஸ்காரர் பலி

Published On 2021-04-18 03:46 GMT   |   Update On 2021-04-18 03:46 GMT
ஆவடி அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மகளுடன் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
ஆவடி:

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு அடுத்த கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர், கடந்த 2003-ம் ஆண்டு தமிழ்நாடு போலீசில் வேலைக்கு சேர்ந்தார்.

திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் பணியாற்றி வந்தார். கடைசியாக 2013-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றுவிட்டார்.

இவருடைய மனைவி மீனாட்சி (35). இவர்களுடைய மகள்கள் மனிஷா (15) மற்றும் பிரீத்தி (13).

பாஸ்கர் நேற்று மாலை மீஞ்சூர் பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கி இருந்த தனது 2-வது மகள் பிரீத்தியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

ஆவடியை அடுத்த மோரை அருகே வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது.

இதில் தந்தை-மகள் இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பிரீத்தியை, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரீத்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News