செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் கொரோனா தொற்று 20 மடங்கு அதிகரிப்பு- சுகாதாரத்துறை செயலர் அருண் தகவல்

Published On 2021-04-16 07:46 GMT   |   Update On 2021-04-16 07:46 GMT
புதுவையில் 4,814 பேர் பரிசோதிக்கப்பட்டு 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மார்ச் 1-ந்தேதி ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 20 மடங்கு அதிகமாகியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் 4,814 பேர் பரிசோதிக்கப்பட்டு 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மார்ச் 1-ந்தேதி ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 20 மடங்கு அதிகமாகியுள்ளது.

தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள வேண்டும். புதுவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் அலர்ஜி ஏற்படவில்லை. பயத்தை விட்டுவிட்டு தடுப்பூசி போடலாம். 5 நாட்களில் தடுப்பூசி திருவிழாவில் 52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். சுகாதாரத்துறை மூலமாக 100 இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு மட்டுமில்லாமல் பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் அடையாள அட்டையுடன் வரலாம். தடுப்பூசியும் போதிய எண்ணிக்கையில் உள்ளது. இறப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

75 சதவீத கொரோனா இறப்புக்கு, தாமதமாக மருத்துவமனையில் சேர்வதுதான் முக்கியக் காரணம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரம் முதல் 48 மணி நேரத்தில் இறந்துள்ளனர். அறிகுறி ஏற்பட்டும் பரிசோதிக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்ட பிறகு கடைசி நேரத்தில்தான் மருத்துவமனை வருகிறார்கள்.

கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து பரிசோதியுங்கள். மக்கள் ஒத்துழைப்பு முக்கியம். குறிப்பாக தொடர் இருமல், சளி, ஜூரம் இருந்தால் உடன் பரிசோதியுங்கள். வாழ்க்கையும், வாழ்வு ஆதாரமும் முக்கியம். அதனால்தான் சமூக இடைவெளி, முககவசம், கைகழுவுதல் முக்கியம் என்று குறிப்பிடுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News