செய்திகள்
சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட படகு குழாம்.

சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடிய நோணாங்குப்பம் படகு குழாம்

Published On 2021-04-13 16:04 IST   |   Update On 2021-04-13 16:04:00 IST
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் நோணாங்குப்பம் படகுகுழாம் வெறிச்சோடியது.
அரியாங்குப்பம்:

புதுவையில் முக்கிய சுற்றுலா தலமாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. இங்கு புதுவை மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அங்கு படகுசவாரி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 10-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 200 பேர் பயணம் செய்யும் அளவுக்கு ராட்சத படகும் இருக்கிறது. இந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து கடலின் அழகை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்வார்கள்.

இந்தநிலையில் புதுவையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருவிழாக்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் நோணாங்குப்பம் படகு குழாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நேற்றும் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் படகுகுழாம் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை இ்ல்லாததால் படகுகளும் கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

Similar News