செய்திகள்
திருப்பத்தூர் அருகே தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர் மரணம்
திருப்பத்தூர் அருகே தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் கல்லல், திருவேகம்புத்தூர் அருகே பொன்னளிக்கோட்டையை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40). இவர் திருப்பத்தூர் அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் காரையூருக்கு வந்தார்.அவருக்கு திடீரென்று உடல்நிலை சரி இல்லாததால் மாற்று அலுவலர் நியமிக்கப்பட்டார். காரையூரில் தங்கி இருந்த அவர் நேற்று சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.