செய்திகள்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு

தேர்தல் நடத்தை விதியை மீறிய பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

Published On 2021-03-27 10:14 GMT   |   Update On 2021-03-27 10:14 GMT
புதுவையில் தேர்தல் உயர்மட்ட அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை பா.ஜ.க.வினர் வாக்காளர்களின் தொலைபேசி எண்களுக்கு பா.ஜ.க.வில் சேருங்கள் என்கிற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக பிரதேச குழு உறுப்பினர் ஆனந்த், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு 24-ந் தேதியும், 26-ந் தேதியும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பல கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

தனி நபர் தரவுகள் எப்படி பா.ஜ.க.வுக்கு கிடைத்தது என்று அறிக்கை அளிக்க கோரி புதுவை அரசுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும், ஆதார் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனி நபர் விவரங்கள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே பல உத்தரவுகளை வழங்கி உள்ளது.

அப்படி இருக்கும்போது, தனிநபர் பற்றி விவரங்கள் பா.ஜ.க.வால் எப்படி சேகரிக்க முடிந்தது. குறிப்பாக பூத் வாரியாக வாக்காளர்களுக்கு தொலைபேசி எண்ணுக்கு பா.ஜ.க.வில் சேருங்கள் என லிங்க் அனுப்பி உள்ளனர்.

அவர்களுக்கு எப்படி வாக்காளர்களின் தொலைபேசி எண் கிடைத்தது? என்பது சம்பந்தமாக புதுவை தேர்தல் அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதுபோன்ற குறுந்தகவலை அனுப்ப பா.ஜ.க. எவ்வித அனுமதியும் பெறவில்லை என தேர்தல் துறை கூறியிருக்கிறது.

அனுமதியின்றி தகவல் பரப்பியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே, பா.ஜ.க.வின் அனைத்து வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். புதுவையில் தேர்தல் உயர்மட்ட அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்து வருகிறோம்.

தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் அளித்துள்ளோம். இந்த சூழ்நிலையில் தேர்தல் உயர்மட்ட அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இப்படிப்பட்ட விதிமீறல்கள் நடக்க வாய்ப்பில்லை.

எனவே, புதுவை தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

குறிப்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News