செய்திகள்
கைது

புதுவையில் ஆசிரியை வீட்டில் திருடிய 2 பேர் கைது

Published On 2021-03-26 22:48 GMT   |   Update On 2021-03-26 22:48 GMT
புதுவையில் வெளிநாட்டு பெண் ஆசிரியை வீட்டில் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

ஐரி‌‌ஷ் நாட்டை சேர்ந்தவர் பிரைன் சித்தார்தா இங்கில்(வயது 56). ஆசிரியை. கடந்த 10 ஆண்டுகளாக புதுவை வைத்திக்குப்பம் பாப்பாம்மாள் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ர‌‌ஷிய மொழி வகுப்புகள் நடத்தி வருகிறார். மாணவர்கள் கட்டணமாக வெளிநாட்டு கரன்சிகளை கொடுத்தாலும் அதனை பெற்றுக்கொள்வார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டு பீரோவில் இருந்த ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பலான அமெரிக்க டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு கரன்சிகளை காணவில்லை. ஆனால் பீரோ உடைக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வீட்டில் வேலை செய்யும் பெண் வள்ளி (45) என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பிரைன் சித்தார்தா இங்கில் வீட்டில் இருந்து வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த கரன்சிகளை முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதாபன்(45) என்பவர் உதவியுடன் இந்திய நோட்டுகளாக மாற்றியதை ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்துனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News