செய்திகள்
ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 2 பேர் கைது
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 2 பேரை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). இவர் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்காவிற்கு செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ் நாச்சியப்பா வீதியில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது, அருகில் நின்று கொண்டு இருந்த 2 பேர் பெருமாளின் மேல் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். உடனே சக பயணிகள் துரத்திச்சென்று அந்த 2 பேரையும் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள், கோவை மாவட்டம் கணேசபுரம் அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன் (38), சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.