செய்திகள்
பணம் பறிமுதல்

மொடக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 10 லட்சம் பறிமுதல்

Published On 2021-03-20 07:03 GMT   |   Update On 2021-03-20 07:03 GMT
சத்தியமங்கலம்-கோவை மெயின் ரோடு பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரிசல் துறை என்ற பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரி டிரைவரிடம் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அவரிடம் விசாரித்த போது தான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு கொப்பரை தேங்காய் வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

மேலும் பணத்துக்கான ஆவணங்களை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் பணத்தை ஒப்படைத்தனர். அவர் கருவூலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆவணத்தை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என்று லாரி டிரைவரிடம் தெரிவித்தார்.

சத்தியமங்கலம்-கோவை மெயின் ரோடு பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது மினி ஆட்டோவை ஓட்டி வந்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் ரு. 81 ஆயிரத்து 500 இருந்தது. அவரிடம் விசாரித்த போது தான் ஆடு வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்துக்கு எந்த ஆவணமும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News