செய்திகள்
திட்டக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்
திட்டக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.
திட்டக்குடி:
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திட்டக்குடி பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சகாமூரி தலைமை தாங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் முன்னிலை வகித்தார். இதில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என கூறி அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டதோடு, விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். அதனை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார்.
இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் விக்னேஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ், தாசில்தார் தமிழ்ச்செல்வி, சமூக நல திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், வேப்பூர் தாசில்தார் செல்வமணி, வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.