செய்திகள்
விபத்து பலி

விக்கிரமங்கலம் அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2021-03-13 14:38 IST   |   Update On 2021-03-13 14:38:00 IST
விக்கிரமங்கலம் அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆலவாய் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 63). கூலித் தொழிலாளியான இவரும், கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரும், பெண் பார்க்கும் விஷயமாக சுத்தமல்லி சென்றனர். பின்னர் அங்கிருந்து சுத்தமல்லி -விக்கிரமங்கலம் சாலையில் மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். ஆலவாய்க்கும் கோரைக்குழிக்கும் இடையே துனிச்சிக்குட்டை என்ற ஏரிக்கு அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மரியதாஸ் ஓட்டி வந்த மொபட் மீது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. அப்போது மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த கோவிந்தராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சரக்கு ஆட்டோவின் முன் சக்கரம் கோவிந்தராஜின் தலையில் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அங்கு வந்து, கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த காமரசவல்லி கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணனை(29) போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News