செய்திகள்
திருமருகல் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
திருமருகல் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி:
நாகையை அடுத்த பண்டாரவாடை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மனைவி கனகவள்ளி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கனகவள்ளி தனது குழந்தையை பார்த்து கொள்ள ஒரு வேலைக்கார பெண்ணை வைக்குமாறு கணவர் பக்கிரிசாமியிடமும், மாமியார் விஜயலட்சுமியிடமும் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த கனகவள்ளி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கனகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கனகவள்ளிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மணிவேலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.