செய்திகள்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய ஜனாதிபதி.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய ஜனாதிபதி

Published On 2021-03-10 14:25 IST   |   Update On 2021-03-10 14:29:00 IST
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
வேலூர்:

வேலூர் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 16 வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து இறங்கினார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். துணைவேந்தர் தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். மேலும் ஆண்டறிக்கை வாசித்தார்.

இந்த ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மொத்தமாக 80 ஆயிரத்து 176 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர்.

இதில் நேரில் அனுமதிக்கப்பட்ட 217 முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும், 35 இளங்கலை மற்றும் 31 முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) சயதுசபி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாலையில் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி வேலூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News