தரங்கம்பாடி அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே உள்ள சின்னங்குடி தெற்கு சுனாமி நகரை சேர்ந்தவர் சத்தியராஜ். மீனவர். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25).
நேற்று இரவு இவர் வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென கட்டையால் தமிழ்செல்வியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இதற்கிடையே காயமடைந்த தமிழ்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொறையார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.