செய்திகள்
கைது

அரச்சலூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

Published On 2021-03-08 11:59 GMT   |   Update On 2021-03-08 11:59 GMT
அரச்சலூர் அருகே குடிபோதையில் வந்ததை தட்டி கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து மெயின் வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு மோகன சங்கர் (29) தீனதயாளன் (27) என 2 மகன்கள் உள்ளனர்.

இதில் தீனதயாளனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு எண்ணெய் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு தீனதயாளன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை சங்கர் உனக்குப் பெண் பார்ப்பதில் நிறைய செலவாகிறது. இப்படி இருக்கும்போது நீ குடித்துவிட்டு வீண்செலவு செய்கிறாயே என்று கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீனதயாளன் தந்தை சங்கரை கீழே தள்ளி நெஞ்சுப்பகுதியில் எட்டி உதைத்தார். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து தீனதயாளனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News