செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது.
பஸ் நிறுத்தத்தையொட்டி உள்ள சாலை பழுதடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், இந்த சாலை வழியாகவே பஸ், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூரில் இருந்து ஏராளமான வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.
இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் வாகனம் இறங்கி ஏறும்போது விபத்துக்கு உள்ளாகி காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.