பாகூர் அருகே நோய் கொடுமையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
பாகூர் அருகே கரையாம் புத்தூர் மாரிநகர் கன்னிய கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார்.
இவரது மனைவி கல்யாணி (வயது58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. கல்யாணி கடந்த 10 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தும் வலி குணமடையவில்லை. இதனால் தினமும் கல்யாணி அவதிக்குள்ளாகி விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பெருமாள் தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பகுதியில் உள்ள ஆட்டு கொட்டகையில் மனைவி சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கல்யாணியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கல்யாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.