செய்திகள்
தூத்துக்குடியில் காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி விஷம் குடித்தார் - வாலிபர் கைது
தூத்துக்குடியில் காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவருடைய மகன் ஆகாஷ் (வயது 20). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை காதலித்து உள்ளார். ஆனால் அந்த மாணவி ஆகாசை காதலிக்கவில்லை.
இதனால் ஆகாஷ் அந்த மாணவி தினமும் பள்ளிக்கூடம் செல்லும்போது, அந்த வழியில் நின்றுகொண்டு தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.