செய்திகள்
மரணம்

பெரம்பலூரில் கற்பூரம் தவறி விழுந்து தீப்பற்றியதில் மூதாட்டி பலி

Published On 2021-03-03 17:15 IST   |   Update On 2021-03-03 17:15:00 IST
பெரம்பலூரில் கற்பூரம் ஏற்றியபோது தவறி சேலையில் விழுந்து தீப்பற்றியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். புரோகிதர். இவரது மனைவி தர்மாம்பாள்(வயது 88). பாலசுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தர்மாம்பாள் தனது மகன் ராமமூர்த்தியுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை ராமமூர்த்தி குரும்பலூரில் உள்ள தனது ஜெராக்ஸ் கடையை திறக்க சென்றுவிட்டார். இதற்கிடையே தர்மாம்பாள் விளக்கு ஏற்றிவிட்டு, சிறிது நேரத்தில் கற்பூரம் ஏற்றியபோது அவரது சேலையில் கற்பூரம் தவறி விழுந்து தீப்பற்றி, உடலில் பரவியது. இதில் தர்மாம்பாளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையறிந்த அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து தர்மாம்பாளை மீட்டு ஆட்டோவில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் தர்மாம்பாளை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தர்மாம்பாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ராமமூர்த்தி பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்

Similar News