செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்- புதிய பாலங்கள் கட்ட ரூ.260 கோடி ஒதுக்கீடு

Published On 2021-02-27 08:37 GMT   |   Update On 2021-02-27 08:37 GMT
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பராமரிப்பு மற்றும் புதிய பாலங்கள் கட்டுவதற்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு மாநகராட்சி பட்ஜெட் ரகசியமாக தாக்கல் ஆனது.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நடத்தப்படவில்லை. வியாபாரிகள், பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் இது நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் பற்றாக்குறை ரூ.554 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற்றது. இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு குறைந்தபட்சம் ரூ.150 கோடி செலவாகும் என்று வரவு-செலவு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 கோடி தொழில் வரியையும் இழந்தது.

2020-21-ம் ஆண்டில் மாநகராட்சி வடிகாலுக்கு ரூ.847.5 கோடி செலவழித்தது. 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.1077 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு மற்றும் புதிய பாலங்கள் கட்டுவதற்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ.114 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.

பஸ் பாதை சாலைகளுக்கான செலவுகளை ரூ.172 கோடியில் இருந்து ரூ.180 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

எல்.இ.டி. பல்புகள், மின்சார கம்பங்கள் மற்றும் பிற உதிரி பாகங்களுக்கு 2020-21-ல் ரூ.131 கோடி செலவிடப்பட்டது. அடுத்த ஆண்டு மின் பிரிவுக்கு ரூ.150 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை கடந்த ஆண்டு ரூ.40.6 கோடியாக இருந்தது. தற்போது 300 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021-22-ல் திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.134.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News