செய்திகள்
சீல் வைப்பு

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல் வைப்பு

Published On 2021-02-27 06:14 GMT   |   Update On 2021-02-27 06:14 GMT
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து விட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களை நாளை முதல் பூட்டி சீல் வைக்க உள்ளனர்.
சென்னை:

தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே மாதம் 24-ந் தேதியுடன் முடிகிறது. புதிய அரசை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமி‌ஷன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இதனால் எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் இன்றுடன் முடிவடைந்தது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் அவரவர் தொகுதியில் அரசு சார்பில் அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்களில் தான் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களை சந்தித்து வந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து விட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களை நாளை முதல் பூட்டி சீல் வைக்க உள்ளனர்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பொருட்கள் மற்றும் கோப்புகள் இருந்தால் அவற்றை காலி செய்து அறையை ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதேபோல் மாநகராட்சி பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகங்கள், நகராட்சி கட்டிடங்களில் உள்ள சட்டமன்ற அலுவலகங்களையும் காலி செய்து தருமாறு எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரிகள் 24 மணி நேர கெடு விதித்து உள்ளனர்.

இதனால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் தங்களது பொருட்களை அங்கிருந்து எடுத்து வருகிறார்கள். நாளைக்குள் அலுவலகத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் உதவியாளர்கள் மூலம் அறையை காலி செய்யும் பணி நடந்து வருகிறது.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் சென்னையில் அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளையும் திங்கட்கிழமை முதல் பூட்டி சீல் வைக்க தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

Similar News