செய்திகள்
போச்சம்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலி
போச்சம்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குண்டுமணி (வயது 56). விவசாயி. இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குண்டுமணி தனது மாமியார் வீடான பர்கூர் சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வேலம்பட்டி அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோதி குண்டுமணி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குண்டுமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.