செய்திகள்
சட்டசபை தேர்தலில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை- முத்தரசன் பேட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சிவகங்கை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தைப் பொறுத்தவரை 2 அணிகள் தான். 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை. ஒன்று தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்த கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்து தொடர்ந்து நீடித்து வருவது மட்டுமின்றி பலமாகவும் இருக்கிறது. மற்றொரு அணி அ.தி.மு.க. தலைமையில் இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
சாதி மற்றும் மத ரீதியிலான கலவரங்களை தூண்டி விட்டு சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். அது தமிழகத்தில் நிறைவேறாது. வருகிற சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என கூறும் அ.தி.மு.க. அரசு, உள்ளாட்சி தேர்தலையே சரிவர நடத்தி முடிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு தேர்தலைக் கண்டு அச்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.