செய்திகள்
வேன் டிரைவர் மருது

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்- வேன் டிரைவர் கைது

Published On 2021-02-03 22:10 IST   |   Update On 2021-02-03 22:10:00 IST
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மினிவேனில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
அணைக்கட்டு:

பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன், சுரேஷ் குமார் உள்ளிட்ட போலீசார் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வேலூரை நோக்கி சென்ற மினி வேன் ஒன்று சுங்கச்சாவடியில் வந்து நின்றது. சந்தேகம் அடைந்த போலீசார் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அப்போது வேனில் பண்டல்களில் சுமார் ஒரு டன் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து வேனுடன் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் வேன் டிரைவர் பெங்களூரு ஜே.சி.ரோடு 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த பாண்டு மகன் மருது (வயது 34) என்பதும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுவை கைது செய்தனர்.

Similar News