செய்திகள்
சர்வமுத்து ரமேஷ்

தொழில் தொடங்கலாம் என கூறி ஆந்திராவை சேர்ந்தவரிடம் புதுவை சாமியார் ரூ.10 லட்சம் மோசடி

Published On 2021-01-30 02:23 IST   |   Update On 2021-01-30 02:23:00 IST
தொழில் தொடங்கலாம் என்று கூறி ஆந்திராவை சேர்ந்தவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த புதுவை சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்டமங்கலம்:

புதுச்சேரியை சேர்ந்தவர் சர்வமுத்து ரமே‌‌ஷ். சாமியாரான இவர், ஆந்திராவில் கோவில் நடத்தி வருகிறார். அப்போது இவருக்கு ஆந்திரா கண்டவாணிபள்ளி பகுதியை சேர்ந்த ரவீந்திரநாத் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் அவர், ரவீந்திரநாத்திடம் புதுவையில் தொழில் தொடங்கலாம். அதற்காக ரூ.10 லட்சம் தயார் செய்யுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ரவீந்திரநாத்தும், ரூ.10 லட்சத்தை புரட்டினார். இதையடுத்து கடந்த 25-ந்தேதி 2 பேரும், காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். வரும் வழியில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கினர். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது, சர்வமுத்துரமேசை காணவில்லை. ரூ.10 லட்சமும் மாயமாகி இருந்தது. பணத்துடன் அவர் தப்பியோடியது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவீந்திரநாத், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ரவீந்திரநாத், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார் சர்வமுத்துரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News