செய்திகள்
தற்கொலை

புதுச்சத்திரம் அருகே பொக்லைன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-01-25 21:13 IST   |   Update On 2021-01-25 21:13:00 IST
பிரசவத்திற்காக சென்ற மனைவி திரும்ப வராததால் மனமுடைந்த பொக்லைன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நொச்சிப்பட்டி கல்யாணி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் ரேணுபிரசாத் (வயது 27). பொக்லைன் டிரைவர். இவருக்கும், பரமத்திவேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த தீபா (23) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற தீபா, குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகியும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மனைவியை வீட்டிற்கு வருமாறு ரேணுபிரசாத்‌ அழைத்தார். ஆனால் மனைவி வராததால் சம்பவத்தன்று மாமனார் வீட்டிற்கு ரேணுபிரசாத் சென்றார்.

பின்னர் தீபாவை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவரது மனைவி வர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுபிரசாத் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரேணுபிரசாத்‌‌ இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News