செய்திகள்
விபத்து

கீழ்பென்னாத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பெயிண்டர் பலி

Published On 2021-01-24 16:08 IST   |   Update On 2021-01-24 16:08:00 IST
கீழ்பென்னாத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.
கீழ்பென்னாத்தூர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் புதிய காலனியில் வசித்து வந்தவர் சேகர் என்ற பீட்டர் (வயது 48), பெயிண்டர். இவர், கிருஷ்ணகிரிக்கு பெயிண்டிங் வேலைக்குச் சென்று விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

நேற்று முன்தினம் கீழ்பென்னாத்தூர் வழியாக வந்தபோது, கீழ்பென்னாத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரபுவின் மகன் வெற்றி (17) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்தார்.

அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் பின்பக்கம் அதே ஊரைச் சேர்ந்த தயாநிதி (17) என்பவர் அமர்ந்திருந்தார்.

கீழ்பென்னாத்தூரில் திண்டிவனம் ரோட்டில் இரு மோட்டார் சைக்கிள்களும் திடீரென நேருக்கு நேர் மோதிகொண்டன. அதில் பீட்டர் படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பீட்டர் இறந்து விட்டதாகக் கூறினர்.

விபத்தில் வெற்றி, தயாநிதி ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News