அமைச்சர்களை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குடியாத்தம் முன்னாள் தி.மு.க. பிரமுகர் கைது
குடியாத்தம்:
குடியாத்தம் சொர்ணலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன் (வயது45). முன்னாள் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக பதவியில் இருந்தவர்.
கட்சிக்கு எதிராக நடந்ததாக கூறி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு தி.மு.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் குடியாத்தம் குமரன் அ.தி.மு.க. கட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் சந்தப்பேட்டை ஆலந்தூர் முனுசாமி தெருவை சேர்ந்த அ.தி.மு.க. 35-வது வட்ட பிரதிநிதி கோல்ட் குமரன் (43). குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இன்று காலை குடியாத்தம் குமரனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.