செய்திகள்
காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை உயிரிழப்பு

காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை உயிரிழப்பு

Published On 2021-01-20 01:53 GMT   |   Update On 2021-01-20 01:53 GMT
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை உயிரிழந்தது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் (வெளிமண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காயத்துடன் 40 வயதான ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த யானையை வனப்பகுதியில் விட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் அந்த யானையின் காதில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த யானையை 4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க நேற்று காலை முயன்றனர்.

அப்போது மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். உடனே அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.
Tags:    

Similar News