குன்னூரில் கிணற்றில் பிணமாக மிதந்த சிறுமி கற்பழித்து கொலையா?
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிரேக் மோர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி தொழிலாளியும், அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் 4-ம் வகுப்பு படிக்கும் அவர்களது 8 வயது மகள் மட்டும் தனியாக இருந்தார். வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.
வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், சிறுமி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறுமியை பல இடங்களிலும தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொலக்கொம்பை போலீசில் தங்கள் மகள் மாயமானது பற்றி புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் சிறுமி பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே சிறுமி மாயமான வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த வட மாநில வாலிபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளையும், மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் சிறுமி மாயமான வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. சிறுமி மாயமாகி 4 வாரங்கள் ஆகியும் அவரது நிலை என்ன? என்று தெரியாமல் இருந்ததால் மாவட்டம் முழுவதும் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள தோட்டங்கள், நீர்நிலைகள் என பல்வேறு இடங்களில் மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தனியார் தோட்டம் ஒன்றில் புதர் மண்டி கிடந்த கிணற்றில் சிறுமி ஒருவரது பிணம் மிதப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் பிணத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
விசாரணையில் அவர் மாயமான 8 வயது சிறுமி என்பது தெரியவந்தது. அந்த சிறுமியை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் என தெரிகிறது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.