செய்திகள்
என்.எல்.சி. அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை
என்.எல்.சி. அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வகுமார் (வயது 54). இவர் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மனிதவளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் செல்வகுமார் கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் இருந்த 29¾ பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம், 3 வெள்ளிக்கொலுசுகளை காணவில்லை. மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.