செய்திகள்
பரமத்தி அருகே குப்பைக்கு வைத்த தீயில் கருகிய பெண் குழந்தை உயிரிழப்பு
பரமத்தி அருகே குப்பைக்கு வைத்த தீயில் கருகிய 5 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே கோனூர் கந்தம்பாளையம் தாத்திப்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. லாரி டிரைவர். இவரது மனைவி கீதா. கடந்த மாதம் 10-ந் தேதி பூபதி வேலைக்கு சென்று விட்டார். மனைவி கீதா தனது குழந்தைகள் கவுசிக் (வயது 7), வித்யபாரதி (5) இருவரையும் வீட்டில் விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார்.
குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வெளியே குப்பைகளுக்கு தீ வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குப்பையிலிருந்து ஏற்பட்ட தீ குழந்தை வித்யபாரதியின் உடையில் பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.
இதில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து உடனடியாக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை வித்யபாரதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.