செய்திகள்
கொலை

ஆற்காடு அருகே காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2021-01-07 08:24 GMT   |   Update On 2021-01-07 08:24 GMT
ஆற்காடு அருகே காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி புதிய காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா (26). டிப்ளமோ படித்துவிட்டு ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் சூர்யாவை எச்சரித்துள்ளனர். ஆனால் சூர்யா தொடர்ந்து அந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சூர்யா பின்னர் வீடு திரும்பவில்லை. முப்பதுவெட்டி ஏரிக்கரை அம்மன் நகர் அருகே உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சூர்யா இறந்து கிடந்தார். அவரை கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

அந்த வழியாக சென்றவர்கள் சூர்யா இறந்து கிடப்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News