செய்திகள்
கைது

வேட்டவலம் அருகே நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவினர் கைது

Published On 2021-01-05 20:27 IST   |   Update On 2021-01-05 20:27:00 IST
வேட்டவலம் அருகே நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம்:

வேட்டவலத்தை அடுத்த கோணலூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பவருடைய மனைவி சந்திரா (வயது 70), அண்ணாமலை 22 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தை இல்லாததால் சந்திரா தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி சந்திரா வீட்டில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை திருட்டு போயிருந்தது.

உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணைபோலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து சந்திராவின் அண்ணன் மகன் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சந்திராவின் கணவர் அண்ணாமலையின், அண்ணன் பாண்டுரங்கன் என்பவரின் மகன் மோகன் (61), சந்திராவை கொலைசெய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சந்திரா தனது உறவினர் மனோகர் குடும்பத்துக்கு மட்டும் பணம் கொடுத்து உதவி செய்து வந்ததாகவும், தனது குடும்பத்துக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்பதால் சந்திராவின் வீட்டுக்கு சென்று தகதராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மோகன், சந்திராவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை எடுத்து சென்றதாக கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சந்திராவின் 3 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News