செய்திகள்
காரியாபட்டி அருகே நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் - விவசாயிகள் கவலை
காரியாபட்டி அருகே ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெற்பயிரில் குலை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி:
காரியாபட்டி அருகே ஸ்ரீராம்பூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெற்பயிரில் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள், காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி, வேளாண் அலுவலர் முருகேசன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.