செய்திகள்
மரணம்

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி

Published On 2021-01-03 07:00 GMT   |   Update On 2021-01-03 07:00 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ளது பெரியபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (வயது 50), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் சோளப்பயிர் பயிரிட்டுள்ளார்.

கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் சோளப்பயிர் அடிக்கடி சேதப்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து மாரி இரவு நேரத்தில் தோட்டத்தில் வனவிலங்குகளை விரட்ட தங்கி வந்தார்.

நேற்று இரவும் வழக்கம் போல் வனவிலங்குகளை விரட்ட மாரி தனது தோட்டத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள குடிசையில் அமர்ந்து கண்காணித்து கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் ஒற்றைகாட்டுயானை திடீரென சோளக்காட்டில் புகுந்தது. பின்னர் சத்தம் இல்லாமல் சென்ற யானை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைப்பகுதிக்கு போய் நின்றது.

இதை பார்த்த விவசாயி மாரி அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் யானை அவரை மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.

இது பற்றி இன்று காலை தெரிய வந்ததும், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

யானை தாக்கி பலியான மாரிக்கு ரத்னாபாய் என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும், சுசீலா என்ற மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News