சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து பலி
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் ஒரு தனியார் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்பவர் உறவினர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
பிகாஸ்திகா மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவர் தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்பவருடன் செல்போனில் ப்ரீபையர் கேம் விளையாடினார்.
அப்போது வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காததால் பிகாஸ்திகா வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் ஏறி ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்து சென்று உயரமான கட்டிடத்தில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தார்.
இரவு 7 மணியளவில் மீண்டும் கீழே இறங்கினார். அப்போது தவறி விழுந்த போது ஆஸ்பெட்டாஸ் கூரை வலுவிழந்து உடைந்தது. இதில் பிகாஸ்திகாவுக்கு தலை, கை, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.