செய்திகள்
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:
குன்னூர் அருகே அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு நிரந்தர தொழிலாளர்கள் தவிர ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 20 நாட்களாக வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை இந்த தொழிற்சாலை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு உடனடியாக வேலை வழங்கக்கோரி கொட்டும் மழையிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.