செய்திகள்
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு 6 மாதம் சிறை
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஈரோடு ஆர்.டி.ஓ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 50 பேர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இவர்களிடம் போலீசார் நன்னடத்தை பத்திரம் மூலம் இனிமேல் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று எழுதி வாங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோடு பகுதியை சேர்ந்த மதன்குார் (வயது 34) , வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (24) ஆகியோர், தாங்கள் எழுதி கொடுத்ததை மீறி, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். அதனால் கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மதன்குமார், மணிகண்டன் ஆகியோரை கருங்கல்பாளையம் போலீசார் நேற்று ஈரோடு ஆர்.டி.ஓ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த ஆர்.டி.ஓ. சைபுதீன் 2 பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து மதன்குமார், மணிகண்டன் ஆகியோர் ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகள் 2 பேர் சிறை தண்டனை பெற்றதை தொடர்ந்து மற்ற ரவுடிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.