செய்திகள்
அளவுக்கு அதிகமாக குடிநீரை உறிஞ்சி விற்பதாக கிராம மக்கள் போராட்டம்
சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக குடிநீரை உறிஞ்சி விற்பதாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி:
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்தில் தனியார் இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவாஜிநகர் மக்கள் பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் பஞ்சாயத்து நிர்வாகமும் அவ்வபோது எச்சரித்து வந்தனர். ஆனால் தண்ணீர் திருட்டு மட்டும் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முறையிட வந்தனர். அப்போது சப்-கலெக்டர் தினேஷ்குமார் அலுவல் பணி காரணமாக வெளியில் சென்று இருந்ததால் கிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர். பின்னர் ஒன்றிய கவுன்சிலர் சண்முகத்தாய் தலைமையில் பொதுமக்கள் தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரியிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.