செய்திகள்
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை- ஆம்புலன்சு டிரைவர் போக்சோவில் கைது
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்சு டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சாஸ்திரி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் லோகேஷ் (23). தனியார் ஆம்புலன்சு டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார்.
இந்நிலையில் தனியாக வசித்து வந்த லோகேஷ், அவரது உறவினர் வகையில் தங்கை முறையான 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இந்த பழக்கத்தின் மூலம் லோகேஷ், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் கடத்தி சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகள் மாயமானதாக ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், ஈரோடு பகுதியில் மாயமான சிறுமியும், லோகேசும் நேற்று நின்று கொண்டிருந்தனர். இதையறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில், லோகேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.