செய்திகள்
கைது

போலி கணக்கு மோசடி : ஓய்வு பெற்ற கதர் கிராம தொழில் வாரிய துறை அதிகாரிக்கு 33 ஆண்டு ஜெயில்

Published On 2020-12-17 06:27 IST   |   Update On 2020-12-17 06:27:00 IST
போலி கணக்கு மோசடி வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற கதர் கிராம தொழில் வாரிய துறை அதிகாரிக்கு 33 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
காஞ்சீபுரம்:

வேலூர் மாவட்டம் வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 65). இவர் காஞ்சீபுரத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்துறை கண்காணிப்பாளர் மற்றும் களைத்தல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பதவியில் இருந்தபோது அந்த துறையில் போலியான கணக்கு எழுதி மோசடி செய்ததாக இவர் மீது கடந்த 2006-ம் ஆண்டு கதர் கிராம தொழில் வாரிய துறையின் துணைப்பதிவாளர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகண்ணுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு சின்னகண்ணுவை விடுதலை செய்தது. மேலும் இந்த வழக்கு காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் இளவரசு ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி கயல்விழி, சின்னகண்ணுவின் மீது நம்பிக்கை மோசடி செய்தல், ஏமாற்றுதல், பொய்யான கணக்கு வழங்குதல் உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 33 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News