செய்திகள்
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்- 105 பேர் கைது

Published On 2020-12-15 17:54 IST   |   Update On 2020-12-15 17:54:00 IST
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திய 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டம் நடத்த போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

மேலும் இந்த போராட்டம் நடத்துவதற்காக பந்தல் அமைப்பதற்கும் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் எதிரே உள்ள தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் வந்து போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, கோபால், எம்.எஸ்.கண்ணன், விசுவநாதன், சந்திரன், முத்துப்பாண்டி, முத்துராமலிங்க பூபதி, உலகநாதன், திருநாவுக்கரசு, வீரையா, தண்டியப்பன் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News