செய்திகள்
திருப்பாச்சேத்தி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது
திருப்பாச்சேத்தி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்:
திருப்பாச்சேத்தி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த டி.வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் (வயது 30), பூச்சிருளப்பன் (25). இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் பூச்சிருளப்பனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை காணவில்லை. அந்த மோட்டார் சைக்கிள் குமார் வீட்டிற்கு அருகே நின்றுள்ளது. இது குறித்து பூச்சிருளப்பன், கருப்புசாமி (31) மற்றும் சிலர் சேர்ந்து குமாரிடம் கேட்டு உள்ளனர். அப்போது இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பூச்சிருளப்பன் அவருடன் வந்தவர்கள் குமாரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் அவருக்கு தலை, கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பூச்சிருளப்பன், கருப்புசாமி மற்றும் சிலர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக பூச்சிருளப்பன், கருப்புசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த குமார், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.