செய்திகள்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள மாங்கனி ஓடை வழியாக பக்தர்கள் சென்ற காட்சி.

சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2020-12-13 12:32 GMT   |   Update On 2020-12-13 12:32 GMT
கார்த்திகை மாத சனி பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. புயல் காரணமாக கடந்த பிரதோஷம் மற்றும் பவுர்ணமி தினத்தின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று கார்த்திகை சனி பிரதோஷத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை நுழைவாயில் பகுதிக்கு வந்தனர்.நேற்று காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது.

பின்னர் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினிகள் மூலம் கை கழுவுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்குபின் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப் பாறையில் மூலிகைத் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர். பின்னர் மலை ஏற ஆரம்பித்தனர். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி, சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சனி பிரதோச சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சாமி, சந்தன மகாலிங்கம் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நேற்று கார்த்திகை மாத சனிப் பிரதோஷம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று சனி பிரதோஷத்தையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிபாறை ஓடை, எலும்போடை, நீரோடை பகுதிகளில் மழைக் காலங்களில் பக்தர்கள் தண்ணீருக்குள் இறங்கி செல்லும் சூழ்நிலை உள்ளதாலும் சாதாரண மழை பெய்தால் நீரோடை பகுதிகளில் வெள்ளம் வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் முடியாமல், கோவிலில் இருந்து அடிவார பகுதிக்கு வர முடியாமல் தவித்தனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் சாலை மற்றும் நீரோடைகளில் பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு அறிவித்தது.

தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து மலைப்பாதையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே சாலை வசதியும், அடிவாரப் பகுதியில் இருந்து கோவில் வரை 5 இடங்களில் குடிநீர் தொட்டி, வேட்டைத் தடுப்பு கூடரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் விசுவநாத் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மலைப் பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் பாலம் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News