செய்திகள்
சித்ரா

நடிகை சித்ரா தற்கொலை மர்மம்- ஆர்.டி.ஓ. நாளை விசாரணை

Published On 2020-12-13 11:25 IST   |   Update On 2020-12-13 11:25:00 IST
நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளார். முதலில் அவர் சித்ரா-ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளார்.
பூந்தமல்லி:

பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.

இதனால் சித்ரா இறப்பதற்கு முன்பு என்ன மனநிலையில் இருந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் போலீசார் புலம்பி வருகிறார்கள்.

சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சித்ராவுக்கும் - ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் அடுத்த மாதம் தான் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து இருப்பதாக ஹேம்நாத் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை என்றும், இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே சித்ராவும் ஹேம்நாத்தும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் இன்று 5-வது நாளாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இதேபோல் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து சித்ராவின் உடலை எடுத்து சென்ற தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் டிரைவரிடமும் இன்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இதில் ஏதாவது முக்கிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளார். முதலில் அவர் சித்ரா-ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளார்.

இதனால் சித்ராவின் தற்கொலை வழக்கில் விரைவில் மர்மங்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News