செய்திகள்
கலெக்டர் கண்ணன்

விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரிக்கு விரைவில் கட்டுமானபணி- கலெக்டர் தகவல்

Published On 2020-12-12 16:21 IST   |   Update On 2020-12-12 16:21:00 IST
விருதுநகரில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே பல் மருத்துவக்கல்லூரிக்கு விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும் என கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்:

விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தவுடன் முதல் கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் பொது மருத்துவ கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க இயலாது என இந்திய மருத்துவக்குழு தெரிவித்ததன் அடிப்படையில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என உறுதி பட கூறினார். மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் பேரில் பொது மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து இந்திய மருத்துவ குழு பல் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்க முன் வந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகரில் பல்மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். பல் மருத்துவக்கல்லூரிக்கான இடத்தினை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கலெக்டர் அலுவலக வளாகம் அருகே பொது மருத்துவ கல்லூரி அமைந்துள்ள இடத்தில் 5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெய சந்திரன் விருதுநகர் வந்து சென்றார்.

இதனை தொடர்ந்து நேற்று மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு விருதுநகர் வந்து பல் மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார். பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

மேலும் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு இதுகுறித்து ஆலோசனை நடத்தியதுடன் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க முறையாக இந்திய மருத்துவ குழுவிற்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

Similar News