செய்திகள்
புகார்

போலீஸ்காரர் மீது மனைவி புகார்- திருமணமான 2 மாதத்தில் பரபரப்பு

Published On 2020-12-12 11:46 IST   |   Update On 2020-12-12 11:46:00 IST
விருதுநகரில் திருமணமான 2 மாதத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக போலீஸ்காரர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி என்ற சூர்யா (வயது29). இவருக்கும், தென்காசி மாவட்டம் கீழச் சுரண்டையைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

மாரியப்பன் நீலகிரி மாவட்டம் அம்பலப்புலி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது 22 பவுன் நகை, ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் உமா மகேஸ்வரியின் தந்தை மற்றும் தாய்மாமாவுக்கு ஜெயராணி என்பவர் ஒரு போட்டோவை அனுப்பி உள்ளார். அதில், ஜெயராணியுடன் மாரியப்பன் இருந்தார். தங்களுக்கு இடையே ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அவரை வேறு எந்த பெண்ணுடனும் சேர்ந்துவாழ விடமாட்டேன் என்றும் ஜெயராணி போட்டோவுடன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி குடும்பத்தினர் மாரியப்பனிடம் கேட்டபோது, அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாங்கள் போலீஸ் குடும்பம். எங்களிடம் யாரும் கேட்க முடியாது என கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீ சில் உமாமகேஸ்வரி புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் மாரியப்பன், அவரது அண்ணன் மகேந்திரன் (நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்) அவரது மனைவி உமாமகேஸ்வரி, மாமனார் பரமசிவம், மைத்துனர் சந்திரசேகரன், அவரது மனைவி மகராசி, உறவினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News